புதிய அரசியல் எஜமானர்களின் 'கட்டளைப்படி' செயல்படுகிறார் ஜெயந்தி: அபிஷேக்மனு சிங்வி சாடல்!!
டெல்லி: அன்று 'ஜெயந்தி வரி' என்று தம்மை விமர்சித்த இன்றைய புதிய அரசியல் எஜமானர்களின் சொல்படிதான் ஜெயந்தி நடராஜன் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் அபிஷேக்சிங் மனுவி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அபிஷேக்மனு சிங்வி கூறியதாவது:
ஜெயந்தி நடராஜன் தெரிவித்திருக்கும் தகவல்கள் அனைத்தும் தவறானவை. ஜெயந்தி நடராஜனுக்கு எதிரான ஆவணங்களை வைத்திருக்கும் புதிய அரசியல் எஜமானர்களின் சொல்படி செயல்படுகிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஜெயந்தி நடராஜன் அனுப்பிய கடிதம் ஊடகங்களில் வெளியானதன் பின்னணியில் அந்த அரசியல் எஜமனார்கள்தான் இருக்கின்றனர். அவர்கள் சொல்படிதான் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர் சந்திப்பையே நடத்தியும் இருக்கின்றனர்.
இதற்கு முன்பு 'ஜெயந்தி வரி' என்று அவரை விமர்சித்தவர்கள்தான் அந்த அரசியல் எஜமானர்கள். நாடாளுமன்ற தேர்தல் எதுவும் போட்டியிடாமல் 4 முறையாக எம்.பி.யாக பதவி வகிக்க முடிந்தவர்கள் குற்றம்சாட்டுவது வருத்தம் அளிக்கிறது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீதான ஜெயந்தியின் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை. சுற்றுச் சூழலுக்கு ஆதரவாகவும் பழங்குடியினர் நலனுக்காகவும் ஆதரவாக நிற்பது காங்கிரஸ்தான். காங்கிரஸின் கொள்கையை ஜெயந்தி பின்பற்றி இருப்பாரேயானால் ஏன் அவர் குற்றம்சாட்டுகிறார்?
அப்படியானால் ஏழைகளுக்கு எதிரான பணக்கார்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் ஆதரவான பாரதிய ஜனதா அரசாங்கத்தை ஜெயந்தி ஆதரிக்க விரும்புகிறாரா?
இவ்வாறு அபிஷேக்சிங் மனுவி கூறினார்.
அதென்ன 'ஜெயந்தி வரி'?
லோக்சபா தேர்தலின் போது பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, விற்பனை வரி, சுங்க வரி என பல்வேறு வரிகளைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் முதல்முறையாக ஜெயந்தி வரி பற்றி கேள்விப்படுகிறேன். அவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது ஜெயந்தி வரியை செலுத்தவில்லை என்றால் எந்தக் கோப்புகளும் நகராதாம், அப்படியே தேங்கி நின்றுவிடுமாம். அதனாலேயே அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.