நடிகை ஜெயசுதாவிற்காக களமிறங்கிய தோழி ஜெயப்பிரதா … அனல் பறக்கும் பிரசாரம்
செகந்திராபாத்: நடிகை ஜெயசுதா, செகந்திரபாத் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். அவருடைய தோழியும், நடிகையும், எம்.பியுமான ஜெயப்பிரதா அனல் பறக்க பிரசாரம் செய்து வருகிறார்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஜெயப்பிரதா. என்.டி.ராமராவ் காலத்தில் தெலுங்குதேசம் கட்சியில் மாநில மகளிர் அணித்தலைவராக இருந்த ஜெயப்பிரதா, சந்திரபாபுநாயுடுவின் ஆட்சியில் அதிருப்தி அடைந்து அக்கட்சியில் இருந்து விலகினார்.
பின்னர், உத்தரபிரதேசம் சென்று அங்கு சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்த ஜெயப்பிரதா, அதில் இருந்தும் விலகி தற்போது ராஷ்டிரிய லோக் தளம் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஜெயசுதா - ஜெயப்பிரதா
காங்கிரஸ் கட்சி சார்பில் செகந்திராபாத் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நடிகை ஜெயசுதா உடன் நீண்டகாலம் நட்புடன் இருக்கிறார். அந்த நட்பிற்காக இரண்டு நாட்கள் செகந்திரபாத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
மீண்டும் எம்.எல்.ஏ ஆவாரா?
ஜெயசுதா கடந்த முறையும், செகந்திரபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
நட்பிற்காக பிரசாரம்
வேறு கட்சியில் இருந்தாலும் தோழியின் வெற்றிக்காக பிரசாரம் செய்வதற்காக இருதினங்கள் ஒதுக்கியுள்ளார். ஞாயிறன்று பிரசாரம் செய்த ஜெயப்பிரதா, கட்சிக்காக வரவில்லை, நட்பிற்காக, தோழிக்காக பிரசாரம் செய்வதாக கூறினார்.
வெற்றி உறுதி
என்தோழி ஜெயப்பிரதா எனக்காக பிரசாரம் செய்துவருகிறார். இது எனது வெற்றிக்கு மிக முக்கியமான அடித்தளம் என்று மகிழ்ச்சி பொங்க கூறிவருகிறார் ஜெயலலிதா. வேறு வேறு கட்சியில் இருந்தாலும் நட்பு பாராட்டும் இந்த நடிகைகளை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.