பாஜகவில் சேர்ந்து கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடணும்: கட்சித் தாவல் ஜெயபிரதா
டெல்லி: நடிகை ஜெயபிரதா ராஷ்ட்ரிய லோக்தள கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட விரும்புகிறார்.
தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை துவங்கியவர் நடிகை ஜெயபிரதா. அவர் தெலுங்கு தேசத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். சமாஜ்வாடி கட்சியில் அவருக்கு அமர் சிங் ஆதரவாக இருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவரும் கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஜெயபிரதா ராஷ்ட்ரிய லோக்தள கட்சியில் சேர்ந்து அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட விரும்புகிறார்.
ஜெயபிரதாவுடன் அமர் சிங்கும் பாஜகவில் சேர உள்ளாராம். இது தொடர்பாக அமர் சிங் பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இது குறித்து ஜெயபிரதா கூறுகையில்,
மோடிஜியின் தலைமை குணத்தை பார்த்து அனைவரும் வியந்து கொண்டிருக்கின்றனர். பல பெரிய தலைவர்கள் அவருடன் பணியாற்ற விரும்புகிறார்கள். இந்நிலையில் நான் பாஜகவில் இணைய விரும்புகிறேன். இது தொடர்பாக அமர் சிங் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றார்.