குவைத்திலிருந்து ஹைதராபாத் வந்த ஜசீரா விமானத்தில் தீ.. பயணிகள் தப்பினர்
ஜசீரா விமானம் ஐதராபாத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video
ஐதராபாத்: குவைத்திலிருந்து ஐதராபாத்துக்கு வந்த ஜசீரா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பிடித்ததால் பயணிகளிடையே அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.
குவைத்திலிருந்து நேற்று இரவு ஜசீரா ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஹைதராபாத்துக்கு புறப்பட்டது. இந்த விமானம் இரவு 1.30 மணிக்கு ஹைதராபாத் வந்தது. அந்த விமானம் தரை இறங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு விமானத்தின் வலது புற எஞ்ஜினில் திடீரென தீப்பிடித்தது. இதனால், விமானப் பயணிகளிடையே அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்பட்டது.
விமானத்தில் திடீரென தீப்பிடித்தாலும், விமானிகள் சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை விரைவாகவும் பத்திரமாகவும் தரை இறக்கினர். விமானம் நின்றவுடன் சில நிமிடங்களில், ஐதராபாத் விமான நிலையத்திலிருந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பயணிகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தால் உதவ, விமான நிலைய ஆம்புலன்ஸ் விமானம் அருகே விரைந்து சென்றது.
தீப்பிடித்த விமானத்திலிருந்த 149 பயணிகளையும் விமானப் பாதுகாப்பு ஊழியர்கள் அவசர அவசரமாக இறக்கிவிடப்பட்டனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் எற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
விமானத்தில் தீப்பிடித்ததற்கு மின்கசிவு அல்லது ஏதேனும் விமான தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்று விமான பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.