கொரோனாவால் இறந்த 72 வயது முதியவர்.. உடலை ஜேசிபி மூலம் இடுகாட்டுக்கு கொண்டு சென்ற அதிகாரிகள்!
அமராவதி: ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 72 வயது முதியவரின் உடலை அவரது வீட்டிலிருந்து புலோடசர் வாகனம் மூலம் கொண்டு செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்கள் பாதுகாப்பாக சுற்றப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட வேண்டும்.
ஆனால் ஆந்திராவில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் 72 வயது முதியவர்.
கொரோனா பாதிப்பு.. ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் சென்னையில் மரணம்
மாநகராட்சி
இவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாலசா நகரை சேர்ந்தவர். இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவர் தனது வீட்டிலேயே இறந்துவிட்டார். நோய் பரவும் அபாயம் உள்ளதாக அக்கம்பக்கத்தார் ஆட்சேபம் தெரிவித்ததால் இதுகுறித்து அவரது குடும்பத்தினர் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர்.
சர்ச்சை
சம்பவ இடத்திற்கு ஜேசிபி இயந்திரத்துடன் அதிகாரிகள் சிலர் வந்தனர். அவர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்தனர். பின்னர் அந்த முதியவரின் உடலை கருப்பு நிற உறையால் சுற்றி ஜேசிபியின் முன் பகுதியில் வைத்துக் கொண்டு இடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம்
இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இறந்தவரின் உடலை ஜேசிபி வாகனத்தில் கொண்டு சென்றது மனிதாபிமானமற்ற செயல். கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை இடுகாட்டுக்கு கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை என கண்டனம் தெரிவித்தார்.
|
சந்திரபாபு நாயுடு கண்டனம்
இதையடுத்து இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பலாசா நகரின் மாநகராட்சி ஆணையர் நாகேந்திர குமாரையும் சுகாதாரத் துறை ஆய்வாளர் ராஜீவையும் ஸ்ரீகாகுளம் ஆட்சியர் நிவாஸ் பணியிடை நீக்கம் செய்தார். அதிகாரிகளின் இந்த செயலுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். சடலமாகவே இருந்தாலும் மரியாதையுடன் கையாள வேண்டும் என தெரிவித்தார்.