கர்நாடக அரசின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றது ம.ஜ.த ! புறக்கணித்தது பாஜக
பெங்களூர்: கர்நாடக அரசு அழைப்புவிடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜகவை போலவே மதசார்பற்ற ஜனதாதள கட்சியும் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சி கலந்துகொண்டது.
காவிரியிலிருந்து வரும் 27ம் தேதிவரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவையை கூட்டி விவாதித்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
மாலை 6 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தையும் சித்தாரமையா கூட்டினார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் சித்தராமையா விளக்கினார். ஆனால், கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்க தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் (ம.ஜ.த) முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஏற்கனவே பாஜகவும் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்ட நிலையில், ம.ஜ.தவின் முடிவு அரசை கையை பிசைய செய்தது.
இதனிடையே மாலையில் கட்சி தலைவர் தேவகவுடாவை அவரின் இல்லத்திற்கே முதல்வர் சித்தராமையா சென்று சந்தித்தார். அப்போது சித்தராமையா கோரிக்கையை ஏற்ற தேவகவுடா, அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டார். பாஜக இக்கூட்டத்தை புறக்கணித்து விட்டது. இதனால் பாஜக, கன்னட மீடியாக்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.