பீகாரில் ஐக்கிய ஜனதாதள கூட்டணி ஆட்சி! பெரும்பான்மை கருத்துக்கணிப்பு சொல்வது இதையே
டெல்லி: பீகாரில் ஐக்கிய ஜனதாதள கட்சி கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு நடத்திய 4 நிறுவனங்களும் ஒரு சேர கூறியுள்ளன. இதனால் பாஜகவுக்கு இந்த தேர்தல் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பீகாரில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. இன்று இறுதி கட்ட தேர்தல் வாக்குப் பதிவு மாலை 5 மணியோடு ஓய்ந்தது.
பீகாரில் 15 ஆண்டு காலம் லாலு பிரசாத் யாதவ் ஆட்சி நடைபெற்றது. இதற்குப் பின்னர் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் இருமுறையும் பாஜக உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை அடுத்து பீகாரில் பாஜக - கடந்த ஆண்டு இந்த கூட்டணி முறிந்தது.
லோக்சபா தேர்தலை பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தனித்தனியாக சந்தித்தன. இதில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது.
பாஜக தலைமையில் தனி அணி தேர்தலை சந்திக்கிறது. பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தார். பீகார் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்கு முன்பு பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
தேர்தல் முடிந்த முடிந்த நிலையில், இன்று, சி வோட்டர், சிசேரோ, நீல்சன், நியூஸ் நேஷன் ஆகிய 4 அமைப்புகள் இந்த கருத்துக்கணிப்புகளை எடுத்துள்ளன. அவை பல டிவி சேனல்கள் மூலம் தனித்தனியாக வெளியாக தொடங்கின.
இதில் என்டிடிவி இந்த நான்கு ஆய்வு நிறுவனங்களின் முடிவுகளையும் ஒப்பிட்டு அதில் இருந்து ஆவரேஜான ஒரு முடிவை எட்டியுள்ளது.
இந்த நான்கு நிறுவன எக்சிட் போல் கருத்துக் கணிப்பின் சராசரி மூலம், என்டிடிவி கூறியுள்ளதாவது: பாஜக கூட்டணி 110 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதள கட்சி கூட்டணி 125 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிற கட்சிகள் 8 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த சேனல் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இந்த கருத்துக் கணிப்பு மூலம், நிதீஷ்குமார் கூட்டணிக்கு பாஜக கூட்டணி கடும் சவாலாக இருக்கும் என்பதும், ஆனால், நிதீஷ்குமார் கூட்டணி ஆட்சியமைக்கும் என்பதும் தெளிவாகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.