சீமாந்திராவுக்கு சிறப்பு நிதி.. பீகாருக்கு ஏன் இல்லை- மார்ச் 1ல் பந்த்' - முதல்வர் நிதிஷ் அழைப்பு!!
பாட்னா: பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 1ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த மாநில முதல்வர் நிதிஷ் குமார், அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தெலுங்கானா தீர்மானத்தை வெள்ளிக்கிழமை ராஜ்யசபாவில் நிறைவேற்றியபோது, மற்றொரு மாநிலமான சீமாந்திராவிற்கு சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்பட்டது. ஆனால் பீகார் மாநிலத்தின் நீண்டகால கோரிக்கையான சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு எந்தவித முடிவுகளையும் எடுக்கவில்லை.
இதற்கு, கண்டனம் தெரிவித்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அரசின் துரோகத்தை கண்டித்து வரும் மார்ச் 1-ந் தேதி பந்த் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
சீமாந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதே சமயத்தில் பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் அலட்சியமாக நடந்துகொள்வது ஏற்கத்தக்கதல்ல என்றும் நிதிஷ்குமார் கூறினார்.