காண்ட்ராக்ட் பணிகளில் எனக்கு கமிஷன் கிடைக்குதே: பீகார் முதல்வர் மஞ்சி வாக்குமூலத்தால் சர்ச்சை!
பாட்னா: காண்ட்ராக்ட் எனக்கும் கமிஷன் கிடைக்குது என்று பீகார் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் முதல்வர் மஞ்சி நேற்று முன்தினம் தாம் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மேம்பாலம் கட்டும் பணிகளின் செலவுகளை இன்ஜினியர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். அதில் ஒரு பகுதியை ஒப்பந்தக்காரர்களுக்கும் சமயங்களில் எனக்கும் வழங்குகிறார்கள் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், பீகார் டி.ஜி.பி.க்கு ஒரு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மஞ்சியின் மீது ஊழல் தடுப்புச் சட்டம், 1989 மற்றும் இந்திய சாட்சி சட்டம், 1872 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
லஞ்சம் பெற்றதைத் தானே ஒப்புக்கொண்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று மஞ்சியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதல்வர் போன்ற உயர் பதவிகளுக்கும் கூட எப்படி லஞ்சம் வருகிறது என்பதை குறியீடாகச் சுட்டிக்காட்டவே அவ்வாறு நான் கூறினேன். மற்றபடி, நான் லஞ்சம் எதுவும் பெற்றதில்லை என்றார்.