தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தேவெ கெளடா அறிவிப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு
தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவெ கெளடா அறிவித்துள்ளார்.
Recommended Video
பெங்களூர்: தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவெ கெளடா அறிவித்துள்ளார்.
1953ல் காங்கிரஸ் கட்சியில் அரசியல் பயணத்தை தொடங்கிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவெ கெளடா தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜனதா கட்சி, ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இவர் முக்கிய பதவிகளை வகித்து இருக்கிறார்.
1996ல் இவர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக இருந்தார். அதேபோல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இவர் கர்நாடக முதல்வராக 1994-1996 வரை இருந்துள்ளார்.
தற்போது இவர் ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக இருக்கிறார். இவரின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராக உள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடத்துகிறது.
இந்த நிலையில்தான் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தேவெ கெளடா அறிவித்துள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தேவெ கெளடா அறிவிப்பால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது சென்னை வந்திருந்தார் தேவே கெளடா. மெரினாவில் அவர் பெரும் சோகத்துடன் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
தேவெ கெளடா பிரதமராவதற்கு கருணாநிதி பெரும் உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.