கர்நாடகாவில் கிங் மேக்கராக உருவாகிறது மதசார்பற்ற ஜனதா தளம்
கர்நாடகத்தில் கிங் மேக்கராக உருவாகிறது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும் அந்த சமயத்தில் கிங் மேக்கராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உருவாகும் என ப்ரீபோல் மற்றும் எக்சிட் போல் கணிப்புகள் கூறுகின்றன.
கர்நாடகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ப்ரீ போல் கருத்து கணிப்புகளை ஆங்கில செய்தி சேனல்கள் வெளியிட்டன. அதில் தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும் எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என்றும் கணிப்புகள் வந்தன.
இந்நிலையில் கர்நாடகத்தில் இன்று வாக்கு பதிவு நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
மொத்தம் 224 தொகுதிகளில் இரு தொகுதிகளின் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளின் படி எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை.
தேர்தல் முடிந்த நிலையில் ஆங்கில செய்தி சேனல்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில் கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என்றும் அங்கு தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும் கணித்துள்ளன.
மேலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எந்த கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறதோ அந்த கட்சியே ஆட்சிக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா டுடே ஆக்ஸிஸ், டைம்ஸ் நவ் விஎம்ஆர், திக்விஜயா டிவி, ஏபிபி, சி வோட்டர், நியூஸ் எக்ஸ் சிஎன்எக்ஸ், நியூஸ் நேஷன் மற்றும் ஜான் கி பாத் ஆகிய நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு குறைந்தபட்சம் 30 முதல் 40 இடங்கள் கிடைக்கும் என்பதால் ஜேடிஎஸ் உண்மையில் கிங் மேக்கராக உருவெடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.