பீகார் தேர்தல்: ஐ.ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார்!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் முறியும் நிலை ஏற்பட்டது.
இதனால் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடலாம் எனும் நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளிடையே மத்தியஸ்தராக சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு ஏற்படுத்தி வைத்தார்.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முலாயம் சிங் கூறியதாவது:
நிதிஷ் குமாரும் லாலு பிரசாத் யாதவுக்கும் இடையேயான ஒற்றுமை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பீகார் தேர்தலில் நிதிஷ் குமார்தான் முதல்வர் வேட்பாளார்.
நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத் யாதவ் முன்மொழிந்துள்ளார். நிதிஷ் குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. மதவாத சக்திகளை துடைத்தெறிய ஒருங்கிணைந்து நாங்கள் பணியாற்றுவோம்.
இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.
அப்போது உடனிருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ், தம்மால் முதல்வர் வேட்பாளராக முடியாத நிலையில், தனது கட்சியில் இருந்தோ, குடும்பத்தில் இருந்து அந்தப் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை. மதவாத சக்திகளின் ஆதிக்கத்தை முறியடிக்கவே, கருத்து வேறுபாடுகளை மறந்து, ஓரணியில் இணைய முன்வந்துள்ளோம் என்றார்.