ராணுவம் அதிரடி.. புல்வாமா தாக்குதலில் தொடர்புள்ள முக்கிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீரில், புல்வாமா தாக்குதலில் தொடர்புள்ள, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின், முக்கிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் ஜஷாத் மக்பூல் பட், தௌவ்சீப் ஆகியோர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து, நிறைய ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில், இன்று காலை முதல் தீவிரவாதிகளுக்கு எதிராக, பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலின்போது கொல்லப்பட்ட ஜஷாத் மக்பூல் பட், தௌவ்சீப் ஆகியோருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி, புல்வாமா பகுதியில், இந்திய துணை ராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
இன்றைய தாக்குதலில், நமது ராணுவ வீரர் ஒருவரும், வீரமரணமடைந்தார்.
ராணுவ மேஜர் கேட்டன் ஷர்மா மற்றும் தீவிரவாதி ஒருவன் நேற்று, காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின்போது கொல்லப்பட்டனர். எனவே இன்று இந்திய ராணுவம் தனது தேடுதல் வேட்டையை மேலும் தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.