147 பயணிகளுடன் அவசரமாக தரை இறங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம்… தொழில் நுட்ப கோளாறு காரணமா?
147 பயணிகளுடன் கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக ஐதராபாத் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
ஐதராபாத்: கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு செல்ல புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் ஐதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 147 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக திடீரென்று ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு பெங்களூரு நோக்கி வந்தது. இந்த விமானத்தில் 147 பேர் பயணம் செய்தனர். இந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என்று விமான ஓட்டிக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, அவர் இரவு 8.30 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். உடனே அவருக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்க உத்தரவு கிடைத்தது. உத்தரவைப் பெற்ற விமான ஓட்டி ஐதாபாத் விமான நிலையத்தில் 8.44 மணிக்கு விமானத்தை தரையிறக்கினார்.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாத வகையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். பின்னர், விமானம் தொழில் நுட்ப பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஜெட் ஏர்வேஸ் விமானம் திடீரென தரையிறக்கப்பட்டதால், அந்த நேரத்தில் ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 4 விமானங்கள் அருகில் இருந்த வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. பின்னர், இரவு 10.15 மணியளவில் விமான போக்குவரத்து சீரடைந்தது.
திடீரென விமானம் தரையிரக்கப்பட்டது குறித்து, ஐதராபாத் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு செல்ல வேண்டிய விமானம் ஐதாராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.