வெடிகுண்டு இருக்கு: சேட்டைக்காரர் போட்ட ட்வீட்டால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம்
மும்பை: வியாழக்கிழமை மும்பையில் இருந்து துபாய் கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானம் வெடிகுண்டு மிரட்டலால் மஸ்கட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று 60 பேருடன் நேற்று மதியம் 12.30 மணிக்கு துபாய்க்கு கிளம்பியது. இந்நிலையில் அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பஞ்சாபைச் சேர்ந்த பர்தாப் சுரிந்தர் என்பவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருந்ததாவது,
மும்பை சிஎஸ்ஐஏவில் இருந்து துபாய்க்கு மதியம் 12.25 மணிக்கு கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானம் 9டபுள்யூ-536ல் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது...#ஆபரேஷன் பத்லா என்று தெரிவித்திருந்தார்.
சுரிந்தரின் ட்வீட்டை ஜெட் ஏர்வேஸ் ஊழியர் ஒருவர் மதியம் 1.30 மணிக்கு பார்த்து அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து 20 நிமிடங்கள் கழித்து மும்பையில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை அவசரமாக மஸ்கட்டில் தரையிறக்குமாறு விமானியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து துபாய் செல்ல வேண்டிய விமானம் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளை இறக்கிவிட்ட பிறகு விமானத்தை ஆளில்லா இடத்திற்கு எடுத்துச் சென்று சோதனை செய்தனர். சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் மஸ்கட் விமான நிலையம் 5 முதல் 10 நிமிடங்கள் மூடப்பட்டது.
சுரிந்தர் அந்த ட்வீட்டை அழித்துவிட்டார். சுரிந்தரின் ட்வீட்டை பார்த்த பலரும் அவரை திட்டியதுடன் விரைவில் நீங்கள் சிறைக்கு செல்வீர்கள் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.