கண்ணு மண்ணு தெரியாமல் கண்டபடி தரையிறங்கிய ஜெட் விமானம்.. திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் நடந்த திகில்
டெல்லி: விமான நிலைய அதிகாரிகளின் அனுமதியை பெறாமலேயே 'கண்மூடித்தனமாக' திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று தரையிறங்கியுள்ள சம்பவத்தை மத்திய அரசின், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற்ற இந்த தரையிறக்க சம்பவம் குறித்து டிஜிசிஏ அளித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
தோகாவிலிருந்து கொச்சி நோக்கி வந்த போயிங் 737 ரக பெரிய விமானத்தால் மோசமான வானிலை காரணமாக கொச்சியில் தரையிறங்க முடியவில்லை. 6 முறை முயன்றும், தரையிறக்க முடியாத நிலை நிலவியுள்ளது. எனவே அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறங்க விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் பைலட் அனுமதி கேட்டுள்ளார். ரன் வேயில் வேறு விமானங்கள் இருக்கும்பட்சத்தில், புதிய விமானத்தை இறக்குவதற்கு அனுமதிக்க முடியாது என்பதால், முன்கூட்டிய அனுமதி தேவைப்பட்டது.
திருவனந்தபுரம் விமான நிலையத்திலும் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. அதற்கு காரணம், ஓடுதளம் தெரியாத அளவுக்கு அங்கு வானிலை மோசமாக இருந்ததுதான். ஆனால், அதற்குள் விமானத்தின் எரிபொருள் மளமளவென தீர்ந்து 349 கிலோ என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இது மிகவும் குறைந்த அளவாகும். இதற்கு மேலும் பறந்தால் எரிபொருள் இன்றி விமானம் தரையில் விழுந்து நொறுங்கும் என்பது உறுதியாகிவிட்டது.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் தகவலை கூறிய பைலட், தனக்கு ஓடுபாதை கண்ணுக்கு தெரியவில்லை என்றும், இருப்பினும், கண்ணைமூடி இறங்குவதாகவும் கூறி விமானத்தை தரையிறக்கியுள்ளார். இந்த வாய்ஸ் ரெக்கார்ட் விமான துறையிடம் உள்ளதாம். அதிருஷ்டவசமாக கண்மூடித்தனமாக இறக்கப்பட்டாலும், ரன்வேயில் சரியாக விமானம் தரையிறங்கியுள்ளது. இதனால் விமான நிலையத்திலோ, தரையிறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளுக்கோ எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பியுள்ளனர்.