போதிய எரிபொருள் இன்றி தரையிறங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம்... கவனக்குறைவால் விமானிகள் சஸ்பெண்ட்
டெல்லி : தோஹாவிலிருந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் போதிய எரிபொருள் இல்லாமல் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியதையடுத்து, கவனக்குறைவாக இருந்த விமானிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சஸ்பெண்டைக் கண்டித்து சன விமானிகள் விமானங்களை இயக்காமல் தாமதப்படுத்தி வேலை நிறுத்த்தில் ஈடுபட்டனர்.
தோஹாவில் இருந்த 142 பயணிகள், 8 விமான சிப்பந்திகளுடன் கொச்சிக்கு கடந்த 18-ம் தேதி வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் போதுமான எரிபொருள் இல்லாத நிலையில், திருவனந்தபுரத்தில் தரையிறங்கியது.
இதுகுறித்து முறையான விசாரணை நடத்துமாறு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், விமான விபத்து விசாரணை ஆணையத்திடம் கேட்டுக்கொண்டது.
கொச்சியில் வானிலை மோசமாக இருந்ததால் வானிலேயே 3 முறை வட்டமிட்ட அந்த விமானம் அருகிலுள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்தது. ஆனால், அங்கும் வானிலை மோசமாக இருந்ததால் 4-வது முயற்சியில் தரையிறக்கப்பட்டது.
ஆனால், போதுமான எரிபொருள் இன்றி விமானத்தை தரையிறக்குவது போக்குவரத்து விதிமீறல் ஆகும். ஒரு விமானம் டேக்ஸி எரிபொருள், டிரிப் எரிபொருள், அவசரகால எரிபொருள் என 3 வகையாக எரிபொருளை சேமித்து வைத்திருக்க வேண்டும்.
இதுதவிர, மாற்று எரிபொருளாக 30 நிமிடங்கள் வரை விமானத்தை இயங்க வைக்கக்கூடிய அளவிற்கு எரிபொருள் இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால், விதியைமீறி தரையிறக்கப்பட்ட அந்த போயிங் விமானமானது மாற்று எரிபொருளாக 270 கிலோ எரிபொருளை மட்டுமே வைத்திருந்தது. விதிமுறைகளின்படி, 1500 கிலோ எரிபொருளை வைத்திருக்க வேண்டும்.
போயிங் ரக விமானம், ஓடுதளத்தில் செல்லும்போது 10 நிமிடங்களுக்குள் 270 கிலோ எரிபொருளை தீர்த்து செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெருக்கடியான நேரத்தில் அருகில் உள்ள பெங்களூர் விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பாமல், திருவனந்தபுரத்திற்கு திருப்பியதும் விதிகளை மீறிய செயலாகும்.
இதுதொடர்பான விசாரணையைத் தொடர்ந்து அந்த விமானத்தை தரையிறக்கிய விமானிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சஸ்பென்ட்டை கண்டித்து சக விமானிகள் விமானத்தை இயக்காமல் தாமதப்படுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.