தந்தேரஸ் அன்று தங்க நகை விற்பனை டல்லடிக்கும்: கவலையில் விற்பனையாளர்கள்
மும்பை: இந்த ஆண்டு தந்தேரஸின்போது மக்கள் தங்க நகை வாங்க ஆர்வம் காட்டமாட்டார்கள் என நகைக்கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வடமாநிலத்தவர் தந்தேரஸை கொண்டாடுகிறார்கள். செல்வ வளம் தரும் கடவுளான லட்சுமிக்கு அன்றைய தினம் பூஜை நடத்தப்படும். வணிக நிறுவனங்கள் மற்றும் வீட்டு வாசலில் ரங்கோலி வரைந்து லட்சுமியை வரவேற்பார்கள். மாலை வேளையில் வீடுகளில் லட்சுமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். அன்றைய தினம் தங்கம் அல்லது வெள்ளி வாங்கினால் வளம் சேரும் என்பது நம்பிக்கை.
வீடுகளில் லட்சுமியை வரவேற்கும் விதமாக அரிசி மாவால் பாதம் வரைவார்கள்.
இந்த ஆண்டுக்கான தந்தேரஸ் நாளை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் மக்கள் தங்க நகைகள் வாங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதாலும், பொருளாதார நிலை சரியில்லாததாலும் தங்க நகை விற்பனை குறைவாகவே நடக்கும் என்று நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் தங்கம் தொடர்பாக புதிதாக மூன்று திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் மக்கள் முதலீடாக தங்கக் காசுகள், கட்டிகளை வாங்குவார்கள் என்று நகைக்கடை உரிமையாளர்கள் கருதுகிறார்கள்.
இது குறித்து அன்மோல் ஜுவல்லர்ஸ் நிறுவனர் இஷு தத்வாவனி கூறுகையில்,
இந்த ஆண்டு தந்தேரஸின்போது தங்க நகை விற்பனை கடந்த ஆண்டை போல இருக்கலாம் அல்லது லேசாக அதிகமாகலாம். இந்த ஆண்டு வருவாய் குறைந்துள்ளது என்றார்.
பருவமழை பொய்த்துள்ளதாலும், பொருளாதாரம் மோசமாக இருப்பதாலும் மக்கள் இந்த ஆண்டு தந்தேரஸின்போது தங்க நகை வாங்குவதில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்கிறார்கள் நகைக்கடை உரிமையாளர்கள். இதற்கிடையே தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டலாம் என்றும் கூறப்படுகிறது.