அண்ணன் இறந்ததால் அரசியலுக்கு வந்த ஹேமந்த்... மக்கள் மனதை வென்ற சோரனின் கதை
ராஞ்சி: ஜார்காண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ளதால் அங்கு பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது.
காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல்தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக அதிக வாய்ப்புகள் உள்ளன.
காங்கிரஸ், ஆர்.ஜே.டி.,ஜே.எம்.எம். ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை எதிர்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் 44 வயதுடைய ஹேமந்த் சோரன்.
ஹேமந்த் சோரன்
ஜார்காண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக உள்ள ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் சிபு சோரனின் இரண்டாவது மகன் ஆவார். ராம்கார் மாவட்டத்தில் உள்ள நேம்ரா கிராமத்தில் பிறந்த ஹேமந்த் சோரன் தனது 30 வயது வரை அரசியல் வாசமே தெரியாமல் வளர்ந்தவர். சிபுசோரனுக்கு எல்லாமுமாக விளங்கியது அவரது மூத்த மகன் துர்கா சோரன் தான்.
அரசியல் வருகை
சிபுசோரனின் மூத்த மகனான துர்கா சோரன் தான் தந்தையுடன் அரசியலில் பயணித்தார். எதிர்பாராத வகையில் அவர் மரணத்தை தழுவ சிபு சோரன் உடைந்து போய்விட்டார். இதையடுத்து விளையாட்டு பிள்ளையாய் துள்ளி திரிந்த ஹேமந்த் சோரன் காலத்தின் கட்டாயத்தால் 2005-ம் ஆண்டு அரசியலுக்குள் நுழைகிறார்.
ஆதரவாளர்கள்
ஹேமந்த் சோரன் பி.இ. படித்துள்ளதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிர்வாகிகள் கூறி வந்த நிலையில், 2005-ம் ஆண்டு தனது வேட்புமனுபில் பி.இ. இடைநிற்றல் என்பதை தெளிவாக குறிப்பிட்டு உண்மையை உடைத்தார். ஹேமந்துக்காக ஜே.எம்.எம். கட்சியினர் சப்பைக்கட்டு கட்டிக்க்கொண்டிருந்த நிலையில், தான் இன்னும் பட்டம் பெறவில்லை என்பதை துணிச்சலாக அவர் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தோல்வி
தும்கா தொகுதியில் முதல்முறையாக 2005-ல் போட்டியிட்ட ஹேமந்த் சோரனை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து பிரிந்த ஸ்டீபன் மாரண்டி தோற்கடித்தார். இந்த தோல்வி அரசியல் என்றால் என்ன என ஹேமந்த் சோரனுக்கு உணர்த்தியது. இதையடுத்து தனது விளையாட்டுத்தனத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு தந்தை சிபு சோரனுடன் இணைந்து தீவிர களப்பணியாற்றத் தொடங்கினார்.
டெல்லி அரசியல்
2009-ம் ஆண்டு முதல் 2010 ஜனவரி மாதம் வரை ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த ஹேமந்த் சோரன் டெல்லி அரசியலையும் கற்று தேர்ந்தார். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் தலைமையின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அதை வைத்து மீண்டும் மாநில அரசியலில் களமிறங்கினார்.
முதல்வர்
கடந்த 2010- செப்டம்பர் மாதம் பாஜகவை சேர்ந்த அர்ஜூன் முண்டா முதலமைச்சராக இருந்தபோது துணை முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது ஹேமந்த் சோரனுக்கு. பின்னர் கருத்துவேறுபாட்டால் அதில் கலகம் ஏற்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின்னர் மீண்டும் 2013-ம் ஆண்டின் இடையில் ஜார்கண்ட் முதல்வராக முதன்முறையாக பதவியேற்ற ஹேமந்த் 2014 டிசம்பர் வரை ஆட்சி செய்தார்.
முன்னோடி
பீகாரில் மகா கட்பந்தன் (மெகா கூட்டணி) அமைவதற்கு முன்பே, ஜார்கண்டில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி., ஜெ.எம்.எம்.கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி (மகா கட்பந்தன்) அமைத்தார். அதோடு பாஜக முதல்வர் ரகுபர் தாஸின் செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வந்தார். பழங்குடியினருக்கு ஆதரவான குத்தகை சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்ததை எதிர்த்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அவை அனைத்தும் இப்போது கை கொடுத்து உதவியுள்ளது.
சுறுசுறுப்பு
சிபு சோரன் வயது மூப்பு காரணமாக முன்புபோல் அவரால் கட்சி நடவடிக்கைகளில் பங்கெடுக்க முடிவதில்லை. முழுக்க முழுக்க ஹேமந்த் சோரன் தான் கட்சியை வழிநடத்தி இன்று ஆட்சியையும் கைப்பற்றும் அளவுக்கு உயர்ந்துள்ளார். மேலும், அவரது சுறுசுறுப்பு இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.