சிகிச்சைக்காக உடல்நலம் சரியில்லாத சகோதரனை 8 கி.மீ தோளில் தூக்கிச் சென்ற ‘பாசமலர்’
ராஞ்சி: ஜார்கண்டில் உடல்நலம் சரியில்லாத 7 வயது சகோதரனை சுமார் 8 கி.மீ தூரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சுமந்து சென்றுள்ளார் 11 வயது சிறுமி ஒருவர். சகோதரன் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் இவ்வாறு தூக்கிச் சென்ற அந்தச் சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிறைந்த பகுதி. எனவே இப்பகுதியில் உட்கட்டமைப்பு பணிகளானது மிகவும் மோசமாக உள்ளது. இங்கு வாழும் மக்களுக்கு மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரிவரக் கிடைப்பதில்லை.
இந்நிலையில் இப்பகுதியில் வாழும் பழங்குடியின சிறுமியான மாலதிக்கு 7 வயதில் உடல் நலம் சரியில்லாத சகோதரன் உள்ளான். பிறர் உதவியில்லாமல் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அச்சிறுவனின் உடல் நிலை மேலும் மோசமானது. அதனைத் தொடர்ந்து தனது சகோதரனை கழுத்தில் அமர வைத்து, மருத்துவமனைக்கு சுமந்து சென்றுள்ளார் மாலதி.
இது தொடர்பாக அச்சிறுமி கூறுகையில், "எங்களுக்கு பெற்றோர்கள் இல்லை. என்னுடைய தாத்தா-பாட்டியே எங்களை பார்த்துக் கொள்கின்றனர். என்னுடைய சகோதரன் உடல்நிலை சரியில்லாமல் உள்ளான்" என்கிறார்.
சுமார் 8கிமீ தூரம் சகோதரனை தோளில் சுமந்து வந்த மாலதியை மருத்துவமனையில் இருந்தவர்கள் மிகவும் பாராட்டினார்கள். பின்னர் அச்சிறுமி தனது சகோதரனுடன் மீண்டும் வீடு திரும்ப ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் பாகாத் பேசுகையில், "சிறுமி மருத்துவமனையில் அழுது கொண்டு இருந்ததை பார்த்தேன், சிறுவனை அழைத்து செல்லமுடியாமல் தவித்தார். சிகிச்சை முடிந்ததும் நாங்கள் அவர்களை ஆம்புல்ன்சில் அனுப்பி வைத்தோம்," என்று கூறியுள்ளார்.