ஜார்க்கண்ட்: பாஜக கூட்டணியில் பிளவு-எதிர்த்து போட்டியிடுவதாக ஏஜேஎஸ்யூ. பாஸ்வானின் எல்ஜேபி அறிவிப்பு!
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக அறிவித்த 4 வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடப் போவதாக அதன் கூட்டணி கட்சியான ஏஜேஎஸ்யூ அறிவித்துள்ளது. அதேபோல் 6 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் எல்ஜேபி கட்சி அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிவடைந்து பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா முன்வைத்த நிபந்தனைகள்தான் இதற்கு காரணம் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு.
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்தது. இதற்காக பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியது. மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கேரளா லாபி சொன்னபடி செய்த சோனியா.. சிவசேனாவிற்கு நோ சப்போர்ட்.. காங்கிரசின் அதிரடி கேம்!
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. 81தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
பாஜக கூட்டணி விவரம்
இம்மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஜேடியூ (ஐக்கிய ஜனதா தளம்), ஏஜேஎஸ்யூ (அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன்), எல்ஜேபி (லோக் ஜனசக்தி) ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. 2014 சட்டசபை தேர்தலில் பாஜக 72 தொகுதிகளிலும் ஏஜேஎஸ்யூ 8 தொகுதிகளிலும் எல்ஜேபி 1 தொகுதியிலும் போட்டியிட்டன. இதில் பாஜக 37, ஏஜேஎஸ்யூ 5 இடங்களைக் கைப்பற்றின.
ஜேடியூ ஏற்கனவே விலகல்
தற்போதைய தேர்தலில் ஜேடியூ ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்துவிட்டது. இதனை தொடர்ந்து ஏஜேஎஸ்யூ, எல்ஜேபி ஆகியவைகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தியது பாஜக.
பாஜக மறுப்பு
தங்களுக்கு 19 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது ஏஜேஎஸ்யூவின் நிபந்தனை. ஆனால் பாஜகவோ 9 இடங்கள்தான் அதிகபட்சம் என கறார் காட்டியது. இந்நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
விலகிய ஏஜேஎஸ்யூ
இதனைத் தொடர்ந்து ஏஜேஎஸ்யூவும் நேற்று 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இதில் சிமாரியா, சிந்த்ரி, மண்டு மற்றும் சக்ராதார்பூர் ஆகிய தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து ஏஜேஎஸ்யூ போட்டியிடுகிறது.
எல்ஜேபியும் விலகல்
இன்னொரு கூட்டணி கட்சியான ராம்விலாஸ் பாஸ்வானின் எல்.ஜே.பி., பாஜக கூட்டணியில் 6 தொகுதிகளை கேட்டிருந்தது. ஆனால் பாஜக இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து ஜார்க்கண்ட் தேர்தலில் எல்.ஜே.பி.யும் 37 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து. இதில் 6 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகிறது எல்.ஜே.பி.
ஜேஎம்எம் மெகா கூட்டணி
இன்னொரு பக்கம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி (ராஷ்டிரிய ஜனதா தள்) ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஜேஎம்எம் கட்சி 43 தொகுதிகளிலும் காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் எஞ்சிய தொகுதிகளில் ஆர்ஜேடியும் போட்டியிடுகின்றன.