ஜார்க்கண்ட்: காங், ஜே.எம்.எம். கட்சிகளுக்கு பிடிகொடுக்காமல் கண்ணாமூச்சி ஆடும் பாபுலால் மராண்டி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஜேஎம்எம் கட்சிகளின் மெகா கூட்டணிக்குப் பிடிகொடுக்காமல் கண்ணாமூச்சி ஆடிக் கொன்டிருக்கிறார் ஜேவிஎம்-பி கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி.
2014 சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து ஏஐஎஸ்யூவின் ஆதரவுடன் நூலிழை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது பாஜக.
பின்னர் பாபுலால் மராண்டியின் ஜேவிபிஎம் கட்சியின் 6 எம்.எல்.ஏக்களை அப்படியே வளைத்துப் போட்டது பாஜக. இதனால் பாஜக மீது அதிருப்தியில் இருந்தால் பாபுலால் மராண்டி.
லோக்சபா தேர்தலின் போதே காங்கிரஸ், ஜேஎம்எம் கூட்டணியில் இணைய அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த கட்சிகள் பாபுலால் மராண்டியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன.
இந்நிலையில் 81 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இத்தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ்- ஜேஎம்எம் மெகா கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பாபுலால் மராண்டியை தொடக்கத்தில் இந்த கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ், ஜேஎம்எம் தலைவர்கள் பாபுலால் மராண்டியை சமாதானப்படுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் யாருக்கும் பிடிகொடுக்காமல் தொடர்பு எல்லைக்கு அப்பால் பாபுலால் மராண்டி இருந்து வருகிறாராம். இதனால் இரு கட்சித் தலைவர்களும் கதிகலங்கி போயுள்ளனர்.
எப்படியாவது பாபுலால் மரான்டியை சமாதானப்படுத்தி மெகா கூட்டணிக்குள் வந்துவிட காங்கிரஸ், ஜேஎம்எம் தலைவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.