ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் - ஜே.எம்.எம்.-காங் அணி 47 இடங்களில் வென்றது- பாஜக- 25 தொகுதிகள்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம்.-காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி 47 தொகுதிகளில் வென்று புதிய அரசை அமைக்க உள்ளது. இக்கூட்டணியின் ஹேமசந்த் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஜார்க்கண்ட்டில் இதுவரை இல்லாத வகையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தனிப்பெரும் கட்சியாக 30 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜே.எம்.எம். தலைமயிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் ஆர்ஜேடி ஒரு தொகுதியிலும் வென்றுள்ளது.
47 இடங்களில் வெற்றி
இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 41. தற்போது ஜே.எம்.எம். கூட்டணிக்கு 47 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் புதிய அரசை இக்கூட்டணி எவ்வித தடையுமின்றி அமைக்க உள்ளது.
புதிய முதல்வராக ஹேமந்த் சோரன்
ஜே.எம்.எம்.-ன் ஹேமந்த் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ளார். கடந்த தேர்தலில் 37 இடங்களில் வென்ற பாஜக இம்முறை 25 தொகுதிகளில்தான் வென்றுள்ளது.
கட்சிகள் வென்ற இடங்கள்
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா(பி) 3 இடங்களிலும் ஏஜேஎஸ்யூ 2 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 1 தொகுதியிலும் வென்றுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக பாஜகவின் ரகுபர்தாஸ் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார்.
15,000 வாக்குகளில் தோல்வி
புதிய அரசு பதவி ஏற்கும் வரை காபந்து முதல்வராக ரகுபர்தாஸை நீடிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தேர்தலில் ரகுபர்தாஸ், சுயேட்சை வேட்பாளர் சரயு ராயிடம் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
2-ல் வென்ற ஹேமந்த் சோரன்
இத்தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஹேமந்த் சோரன், அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து புதிய அரசு அமைக்கப்படும். சட்டசபை தேர்தலில் தெளிவான தீர்ப்பை தந்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி என்றார். டும்கா, பர்ஹ்யெத் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றிருக்கிறார்.