ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ஓபிசி ஜாதிகளுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்குவோம்- அமித்ஷா வாக்குறுதி
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்ந்தால் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்க ஆணையம் அமைப்போம் என பாஜக தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் நேற்று இறுதி கட்ட பிரசாரத்தின் போது அமித்ஷா பேசியதாவது:
ஜார்க்கண்ட் தனி மாநிலம் கோரி இந்த மண்ணின் இளைஞர்கள் போராடிய போது காங்கிரஸ் கட்சி என்ன நிலைப்பாடு கொண்டிருந்தது என்பதை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் விளக்க முடியுமா? ஜார்க்கண்ட் தனி மாநிலத்தை உருவாக்காமல் முட்டுக்கட்டையாக இருந்தது காங்கிரஸ்தான்.
நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் ஓபிசி ஜாதிகளுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்குவதற்கான குழுவை அமைப்போம். மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்தை வழங்கியது. ஓபிசி ஜாதிகளுக்கு கூடுதல் இடஒதுக்கீடு கொடுப்பதால் தற்போது தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
பதவி போன ஒரே நாளில் மாற்றம்.. கிரிமினல் வழக்குகளை மறைத்த வழக்கில் பட்னாவிஸ்க்கு சம்மன்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கும் முட்டுக்கட்டையாக இருந்தது காங்கிரஸ்தான். தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பாதையை உச்சநீதிமன்றம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல்களின் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் ரகுபர்தாஸ் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.
பாஜக அரசானது 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதி, சாலைகள், பாலங்கள் கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொன்டது. நக்சல்பாரிகளை பூமிக்கு அடியில் 20 அடி ஆழத்தில் புதைத்துவிட்டது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர்தாஸ் தலைமையிலான பாஜக அரசு. இவ்வாறு அமித்ஷா பேசினார்.