ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஓரணியில் திரளுமா? ஓரிரு நாளில் க்ளைமாக்ஸ்
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்து வரும் 6 அல்லது 7-ந் தேதி முடிவு எடுக்கப்படும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அண்மையில் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின.
இரு மாநிலங்களிலுமே பாஜக அமோக வெற்றியை ப்பெறும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பாஜக பெற முடியவில்லை. அதுவும் மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சியான சிவசேனாவின் சம அதிகாரப் பகிர்வு கோரிக்கயால் புதிய அரசை உருவாக்க முடியாமல் தத்தளிக்கிறது பாஜக.
பாஜகவுக்கு அக்னி பரீட்சை
ஹரியானாவிலும் பெரும்பான்மைக்குரிய இடங்களைப் பெற முடியாமல் பிற கட்சி ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்ட் தேர்தல் களம் பாஜகவுக்கு நிச்சயம் அக்னி பரீட்சையாக இருக்கப் போகிறது. இதனிடையே எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வரும் ஜே.எம்.எம். கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் கூறியுள்ளதாவது:
மெகா கூட்டணி குறித்து ஆலோசனை
ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் அமர்ந்து பேசி முடிவெடுக்க இருக்கிறோம். என்ன மாதிரியான கூட்டணி அமைய இருக்கிறது என்பதை இப்போது தெரிவிக்க இயலாது; வரும் 6 அல்லது 7-ந் தேதி அதிகாரப்பூர்வமாக இது குறித்து அறிவிக்க இருக்கிறோம்.
எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
தற்போதைய நிலையில் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆகையால் அனைத்து கட்சிகளும் கூடி பேசித்தான் சரியான வியூகத்தை வகுக்க வேண்டியிருக்கிறது. மெகா கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகளுடனும் இப்போது பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இது சட்டசபை தேர்தல்
தேசியவாதம், 370-வது பிரிவு நீக்கம் என்பவை தேசிய அளவிலான பிரச்சனை. தேசிய அளவிலான பிரச்சனைகளுக்கான தீர்ப்பை சில மாதங்களுக்கு முன்னரே மக்கள் அளித்துவிட்டனர். தற்போது நடைபெற இருப்பது மாநில சட்டசபை தேர்தல்.
பாஜகவின் அன்றைய முழக்கம்
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி பிரச்சனைகள் உண்டு. தற்போது ஜார்க்கண்ட் மாநில பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் வேறு எப்போது பேச முடியும்? ஜார்க்கண்ட் மாநிலத்தில் அச்சமற்ற அல்லது ஊழலற்ற அரசை அமைப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்தது பாஜக.
5 கட்ட தேர்தல் ஏன்?
அவர்களது இந்த முழக்கம் நிறைவேறியிருந்தால் தேர்தல் ஆணையம் ஏன் 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்? மாவோயிஸ்டுகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை என்பதால்தானே இப்படியான ஏற்பாடு? ஆகையால் பாஜக ஜார்க்கண்ட் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.
யார் முதல்வர் வேட்பாளர்?
மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நானா? என்கிற கேள்விக்கு இப்போது பதில் அளிக்க முடியாது. எங்களது கூட்டணி கட்சிகள்தான் இதற்கான பதிலை தெரிவிக்க வேண்டும். பாஜக கையில் அதிகாரம் இருக்கிறதுதான். ஆனால் நாங்கள் அதற்கான பதிலை கண்டிப்பாக கொடுப்போம்.
இவ்வாறு ஹேமந்த் சோரன் கூறினார்.