ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: பாஜக மூத்த தலைவர் பிரவீன் பிரபாகரன் திடீர் ராஜினாமா!
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முதன்மை செய்தித் தொடர்பாளருமான பிரவீன் பிரபாகரன் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக இடங்களில் பாஜக வெல்லும்; ஆனால் தொங்கு சட்டசபைதான் அமையும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாஜகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பிரவீன் பிரபாகரன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார்.
மேலும் மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா தலைமையிலான என்பிபி கட்சியில் அவர் இணைந்துள்ளார். அக்கட்சியின் வேட்பாளராக நாலா தொகுதியில் பிரவீன் பிரபாகர் போட்டியிடுகிறார்.
அந்த நிலை இனி ஒரு காலமும் உருவாகிடக் கூடாது... அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரவீன் பிரபாகரன், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரது தலைமையில் நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஜார்க்கண்ட் பின் தங்கியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கத்துக்காக அனைத்து வகைகளிலும் பணியாற்றினேன். ஜார்க்கண்ட் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணிபுரிவேன்.
பாஜகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதில் அதிருப்தி இருந்தது. அதனால் கட்சியில் இருந்து வெளியேறினேன். ஜார்க்கண்ட் மாநில பாஜகவினர் தங்களை சுயபரிசோதனைக்குட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.