ஒரு தொகுதியில் தோற்றாலும் மற்றொன்றில் ஜெயித்து மானம் காத்த ஜார்கண்ட் முதல்வர்!
ராஞ்சி: டும்கா தொகுதியில் போட்டியிட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் லோயிஸ் மரான்டி வெற்றி பெற்றார். அதே நேரம், சோரன் போட்டியிட்ட பர்கெய்ட் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹேம்லால் முர்முவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெறும் ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். நடைபெற்று முடிந்த அம்மாநில சட்டசபை தேர்தலில் முதல்வர் ஹேமந்த், டும்கா மற்றும் பர்கெய்ட் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். தோல்வி பயம் காரணமாகவே இரு தொகுதிகளில் போட்டியிட்டாலும்கூட, இரு தொகுதிகளையும் அபேசாக தூக்கிவிடுவேன் என்று பேட்டியளித்துவந்தார்.
ஆனால் இன்று வாக்கு எண்ணிக்கையின்போது நிலைமை தலைகீழாக உள்ளது. டும்கா தொகுதியில் ஹேமந்த் சோரன் தன்னை எதிர்த்து போட்டியிடும் லோயிஸ் மரான்டியைவிட கடுமையாக பின்தங்கியிருந்தார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் ஹேமந்த்தைவிட 8 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார் மரான்டி.
அதே நேரம் பர்கெய்ட் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹேம்லால் முர்முவைவிட, சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார் ஹேமந்த்.
டும்கா தொகுதியில், 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் லோயிஸ் மரான்டி வெறும் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனவே இம்முறை அத்தொகுதியில் பிரதமர் நரேந்திரமோடி, தனது கட்சி வேட்பாளர் மரான்டிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதும் ஹேமந்த் சோரனுக்கு பின்னடைவை தந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, டும்கா தொகுதியில் ஹேமந்த் சோரன் தோல்வியடைந்ததாக மாலையில் அறிவிப்பு வெளியானது. லோயிஸ் மரான்டி 70 ஆயிரத்து 367 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், ஹேமந்த் சோரன், 65 ஆயிரத்து 105 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.
ஆனால், பர்கெய்ட் தொகுதியில் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 62 ஆயிரத்து 515 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஹேம்லால் முர்மு 38 ஆயிரத்து 428 வாக்குகளும் பெற்றனர்.