ஜார்க்கண்டில் ஜே.எம்.எம்- காங்கிரஸ் பெரும் வெற்றி: பாஜகவுக்கு மாபெரும் தோல்வி
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கு பெரும் தோல்வி பரிசாக கிடைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக அங்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.
முதலில் சற்று மாறி மாறி டிரெண்ட் சென்றாலும், காலை 11 மணிக்கெல்லாம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாக தெரிய ஆரம்பித்தது. இறுதியில் காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 தொகுதிகளிலும், ஏஜேஎஸ்யூ 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இவைதான் இம்மாநிலத்திலுள்ள பிரதான கட்சிகளாகும். பிறர் 4 தொகுதிகளை வென்றனர்.
அதாவது பாஜக தன் வசமிருந்த 12 தொகுதிகளை இழந்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கடந்த சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. எனவே தற்போது வென்ற ஒரு தொகுதி அதற்கு லாபம்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கடந்த தேர்தலை ஒப்பிட்டால் 11 தொகுதிகளை கூடுதலாக பெற்று 30 தொகுதிகளை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல லாபம்தான். கடந்த தேர்தலைவிட 10 தொகுதிகள் கூடுதலாக பெற்று 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்தமுறை எதிர்க்கட்சிகள் இணைந்து மகாகத்பந்தன் என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே நேரம் தனது கூட்டணியில் இருந்த ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் (ஏஜேஎஸ்யூ) கட்சியை கூட தக்கவைக்க முடியாமல் பாஜக இழந்தது. சீட் பங்கீட்டு பிரச்சினைதான் இதற்கு காரணம்.
ஏஜேஎஸ்யூ, இரு தொகுதிகளில் வென்றது. அதாவது இது கடந்த தேர்தலை விட மூன்று தொகுதிகள் குறைவுதான். ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது கடந்த தேர்தலைவிட 5 தொகுதிகள் குறைவாகும். அந்த வகையில் இந்த தேர்தலில் அதிகம் லாபம் பெற்றது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி. அதிகம் இழப்பை சந்தித்தது பாஜக என்று சொல்ல முடியும்.
பாஜக சார்பில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போல பழங்குடியின வாக்குகளை கவரக் கூடிய தலைவர்கள் இல்லை. அத்தோடு, பாஜக ஆட்சியின் போது பழங்குடியினருக்கு சொந்தமான வனப்பகுதி நிலங்களை கையகப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கக் கூடிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.
இது பழங்குடியினர் மத்தியில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்தது. இந்த மாநிலத்தில் சுமார் 27 சதவீதம் பழங்குடியினர். எனவே, இந்த சட்டத் திருத்தத்தின் மூலம், நெருப்போடு விளையாடிவிட்டது பாஜக. இதுபோன்ற சில காரணங்களால் அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. அதேநேரம் தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் முடிவுகள் உத்வேகத்தை அளிக்கும் என்று நம்பலாம்
முன்னதாக, முதல் சுற்றில் பாஜக கூட்டணி 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 24 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது. ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 2 தொகுதிகள், ஜார்கண்ட் மாணவர் யூனியன் 4 தொகுதிகளில் முன்னிலை வகித்தனர். காலை 8.30 மணியளவில் இந்த வித்தியாசம் மேலும் அதிகரித்தது. காங்-ஜேஎம்எம் 34, பாஜக 21, ஜேவிம் 3, ஏஜேஎஸ்யூ 4 இடங்களில் முன்னிலை வகித்தன.
ஆனால் 9 மணியளவில் நிலைமை திடீரென மாறியது. பாஜக 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 32 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன. ஜேஎம்எம் 3, ஏஜேஎஸ்யூ 6 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆனால் காலை 9.30 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கூட்டணி 36, பாஜக 28, ஏஜேஎஸ்யூ 2, ஜேவிஎம் 4 தொகுதிகளில் முன்னிலை வகித்தன.
இதன்பிறகு தொடர்ந்து காற்று காங்கிரஸ் கூட்டணி பக்கமே வீசியது. காலை 10.30 மணிக்கெல்லாம், பெரும்பான்மைக்கு தேவையான 41 தொகுதிகளை தாண்டி காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி முன்னிலை வகித்தது. அப்போதைய நிலவரப்படி, காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி 41 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும் ஏஜேஎஸ்யூ 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன. இதன்பிறகு தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி அமோக முன்னணியே பெற்றது.