ஜார்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக: ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் இன்றும் தொடர்ந்து வெளியாகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 30ம் தேதி துவங்கிய தேர்தல் டிசம்பர் 20ம் தேதிவரை 5 கட்டங்களாக நடைபெற்றது. ஜார்கண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைக்கும் உத்வேகத்துடன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியை பாஜகவிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் சூறாவளி பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில்தான், தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ம் தேதி வெளியாகிறது. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, குடியுரிமை சட்டத் திருத்தம், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் போன்ற, நாடு முழுமைக்குமான பற்றி எரியும் தீவிர பிரச்சினைகளுக்கு நடுவே நடைபெற்ற தேர்தல் இது.
எனவே, தேர்தல் முடிவுகள் எந்த மாதிரியாக இருக்கும், என்ற எதிர்பார்ப்பு நாடு முழுக்கவே எழுந்துள்ளது. இந்த நிலையில் 5வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. 5 தொகுதிகளில் மதியம் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மற்ற 11 தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 .30 மணிக்கு மேல் பல்வேறு ஏஜென்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின. இன்று ரிபப்ளிக் டிவியின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.