காங். மெகா கூட்டணி, உட்கட்சி மோதல்கள்.. ஜார்க்கண்ட்டிலும் பாஜகவுக்கு காத்திருக்கும் தோல்வி!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் அமைத்துள்ள மெகா கூட்டணி மற்றும் உட்கட்சி மோதல்களால் இம்முறை பாஜக பெரும் தோல்வியை சந்திக்கக் கூடும் என்கின்றன களநிலவரங்கள்.
2014 லோக்சபா தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12 தொகுதிகளை அள்ளியது பாஜக. அதன் கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 2 இடங்கள் கிடைத்தன.
இம்முறை தேர்தல் களத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாபுலால் மராண்டியின் ஜேவிபிஎம்பி, ராஷ்டிரிய ஜனதா தள் ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி 7, ஜேவிபிஎம்பி 2, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 4, ராஷ்டிரிய ஜனதா தள் 1 இடத்தில் போட்டியிடுகின்றன. இருப்பினும் சத்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தள் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
மெரினாவில் இடம்.. தந்தையின் ஆசை நிறைவேறாதிருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்- ஸ்டாலின்
மாநில அரசு மீது அதிருப்தி
2014 லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக 37 தொகுதிகளைக் கைப்பற்றி ஏஜஏஸ்யூவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. முதல்வராக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ரகுபர் தாஸ் பொறுப்பேற்றார். பழங்குடிகளுக்கு எதிரான முதல்வரின் நடவடிக்கைகள் மிகக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வைத்துள்ளன. பழங்குடிகளின் நில உரிமைகள் பறிப்பு முயற்சி கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. வேலைவாய்ப்பின்மையும் மிக முக்கிய பிரச்சனை. இது பாஜக எதிர்கொண்டிருக்கும் பிரதான சவால்.
உட்கட்சி மோதல்கள்
பாஜகவுக்கு கை கொடுத்துக் கொண்டிருந்த உயர்ஜாதியினர் மற்றும் தொழில்துறையினர் இம்முறை காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கு ஆதரவாக மாறியிருப்பது பாஜகவுக்கு கடும் பின்னடைவாகும். அத்துடன் ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக வேட்பாளருக்கு எதிராக பாஜகவினர் வேலை செய்துவருகின்றனர் அல்லது தேர்தல் பணியே செய்யாமல் இருக்கின்றனர் என்பதுதான் களநிலவரம்.
சத்ரா தொகுதி நிலவரம்
சத்ரா தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக தற்போதைய எம்.பி. சுனில் சிங் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் கட்சியில் அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது., ராஜ்புத் லாபி மூலம் சீட் வாங்கிவிட்டார் சுனில்சிங்; அவர் தொகுதிக்கும் கட்சியினருக்கும் எதுவும் செய்யவில்லை; நாங்களும் அவருக்கு தேர்தல் பணியாற்றப் போவது இல்லை என்கின்றனர் பாஜகவினர்.
குழிபறிப்பு மும்முரம்
கோதெர்மா தொகுதியில் தற்போதைய எம்.பி. ரவீந்தரா ராய்க்கு சீட் கொடுக்கவில்லை. முன்னாள் ஆர்ஜேடி எம்.எல்.ஏ அன்னபூர்னா தேவிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இவருக்கும் பாஜகவினர் ஆதரவு கிடைக்கவில்லை.
ராஞ்சியில் தோல்வி உறுதி
ராஞ்சி தொகுதியில் தற்போதைய எம்.பி. ரம்தஹால் செளத்ரிக்கு சீட் மறுக்கப்பட்டது. பாஜக வேட்பாலராக சஞ்சய் சேத் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த செளத்ரி சுயேட்சையாக போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத்காந்த் சகாய் இத்தொகுதியில் காங்கிரஸின் மெகா கூட்டணி வேட்பாளராக நிற்கிறார். செளத்ரி சுயேட்சையாக போட்டியிடுவதால் இத்தொகுதியை பாஜக பறிகொடுக்கும் நிலை.
கிரிதிக் தொகுதியில் அதிருப்தி
கிரிதிக் தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ. துல்லு மகாதோவுக்கும் எம்.பி. ரவிந்தர பாண்டேவுக்கும் ஏழாம் பொருத்தம். இதனால் கூட்டணி கட்சியான ஏஜேஎஸ்யூவுக்கு தொகுதியை ஒதுக்கியது பாஜக. அக்கட்சி சந்திரபிரகாஷ் செளத்ரியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இப்போது செளத்ரிக்கு எதிராக துல்லு மகாதோவும் ரவிந்தர பாண்டேவும் ஆளுக்கு ஒரு திசையில் குழிபறித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு சிக்கலா?
ராஜ்மஹால் தொகுதி தனித் தொகுதி. இங்கு பாஜக ஹேம்லால் முர்மு என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் முக்கிய தலைவராக இருந்தவர். இவருக்கு சந்தால் பகுதியில் நல்ல செல்வாக்கு. ஆனால் ஹேம்லால் முர்முவின் சின்னம் தாமரை என்பதை பழங்குடி மக்கள் உணரவில்லை; ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் வில் அம்பு சின்னம்தான் அவர்களது வாய்ப்பு என்கிற இடியாப்ப சிக்கலை ராஜ்மகால் தொகுதி எதிர்கொண்டிருக்கிறது. இப்படி பல தொகுதிகளில் பாஜக நிலைமை இருப்பதால் 7 தொகுதிகளை கைப்பற்றினாலே மிக அதிகம் என்பதே அக்கட்சியினர் கருத்து.