ஆசிரியர் தேர்வு.. 1200 கி.மீ. தூரம் இரு சக்கர வாகனத்தில் கர்ப்பிணியை அழைத்து சென்ற கணவர்.. சபாஷ்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து மத்திய பிரதேசத்திற்கு அதாவது 1200 கி.மீ. தூரத்திற்கு நிறை மாத கர்ப்பிணியை இரு சக்கர வாகனத்திலேயே அழைத்து சென்று தேர்வு எழுத வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் தனஞ்செய் குமார் (27). இவரது மனைவி ஹெம்ப்ராம் (22). பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாவர். ஹெம்ப்ராம் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இவர் ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பேருந்து, ரயில் இயக்கம் இல்லாத நிலையில் என்ன செய்வது என தம்பதி தவித்து வந்தனர்.
ஸ்போர்ட்ஸ் சைக்கிள்... ஹெல்மெட்... கையுறை... சூப்பர் போஸில் முக ஸ்டாலின்!!
அழைத்து செல்ல முடிவு
இதனால் இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்ல முடிவு செய்தனர். சொந்த ஊரான கன்டா டோலா கிராமத்திலிருந்து 1200 கி,மீ தூரத்தில் இருக்கும் தேர்வு மையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் தனஞ்செய் அழைத்து சென்றார். தனது மனைவிக்கு ஆசிரியராக விருப்பம் என்பதால் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற கணவர் இவ்வாறு செய்துள்ளார்.
10 ஆயிரம்
இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் அந்த தம்பதிக்கு உதவி செய்ய முன்வந்தனர். இதுகுறித்து தனஞ்செய் கூறுகையில் குவாலியருக்கு நான் டாக்ஸியை ஏற்பாடு செய்திருந்தால், அதற்கு 30 ஆயிரம் பணம் தேவைப்பட்டிருக்கும். எங்களிடம் உள்ள சின்ன சின்ன நகைகளை அடமானம் வைத்தாலும் கூட ரூ 10 ஆயிரம் மட்டுமே தேற்ற முடியும்.
குவாலியர்
இரு சக்கர வாகனத்தில் தேர்வு மையம் செல்வதற்கும், தேர்வு முடியும் வரை அறை எடுத்து தங்குவதற்கும் ரூ 5000 செலவாகியுள்ளது. இந்த தேர்வுக்காக நாங்கள் ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி காலை புறப்பட்டோம். இரவுகளை முஸாஃபர்நகர், லக்னோவில் கழித்தோம். பின்னர் குவாலியர் சென்றோம் என்றார்.
ஆசிரியர் பணி
இதுகுறித்து தனஞ்செயின் மனைவி கூறுகையில் செல்லும் வழியில் மழையால் நிறைய பிரச்சினைகளை சந்தித்தோம். எனக்கு நடுவழியில் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. என்னால் இந்த தேர்வை எழுத முடியாது என நினைத்தேன். ஆனால் எனது கணவர் எனக்கு தைரியம் கொடுத்ததால் இந்த நீண்ட பயணத்திற்கு நான் ஒப்புக் கொண்டேன். ஜார்க்கண்டில் நான் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தால் நான் நிச்சயம் தேர்வு செய்யப்படுவேன் என்றார்.
சமையல் கலைஞர்
தனஞ்செய் 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். அதிலும் லாக்டவுனால் அவருக்கு சரிவர வேலையும் கிடைக்கவில்லை. இந்த நிலை குறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்கள் இருவரும் குவாலியரில் தங்கி தேர்வு எழுதும் வரை உணவு, தங்குவதற்கான வாடகையை கொடுத்துவிடுவதாக உறுதியளித்துள்ளது. மேலும் நிறைமாத கர்ப்பிணி என்பதால் அந்த பெண்ணுக்கு ஸ்கேன் நாளை எடுக்க உள்ளது.