'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச்சொல்லி இரவு முழுவதும் இளைஞருக்கு அடி உதை.. ஜார்க்கண்டில் கொடூர கொலை
Recommended Video
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருட வந்ததாக கருதி இஸ்லாமிய இளைஞரை ஜெய் ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி ஒரு கும்பல், கம்பத்தில் கட்டி வைத்து இரவு முழுவதும் அடித்து உதைத்ததால் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞர் அடித்துக் கொல்லப்படுவதை அங்கு சுற்றியிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜாரக்கண்ட் மாநிலம் ஹரிஷவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாம்ஸ் டப்ரேஸ் என்ற 24 வயது இஸ்லாமிய இளைஞர்,
அந்த பகுதியில் உள்ள செரைகெலா என்ற ஊரில் கடந்த 18ம் தேதி இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருட வந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
ஜெய் ஸ்ரீராம் சொல்லு
இதையடுத்து இளைஞர் ஷாம்ஸ் டப்ரேஸை பிடித்த அந்த ஊரைச் சேர்ந்த சிலர் கம்பத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். சுமார் 7 மணி நேரம் அந்த இளைஞரை ஜெய் ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி அடித்து உதைத்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதற்கிடையில் தகவல் அறிந்து வந்து இளைஞரை மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
தாமதமாக சிகிச்சை
இது தொடர்பாக உயிரிழந்த இளைஞர் ஷாம்ஸ் டப்ரேஸ் அன்சாரியின் உறவினர்கள் கூறுகையில், "டப்ரேஸை அடிப்பதை பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். டப்ரேஸ்க்கு முறையான சிகிக்சை அளிக்கவில்லை. படுகாயம் அடைந்த டப்ரேஸை சதார் மருத்துவமனையில் முதல் உதவி மட்டும் அளித்துவிட்டு ஜெயிலில் அடைத்தனர். அவனது நிலை மோசமான பின்னரே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சந்தேகப்பட்டு கொலை
டப்ரேஸை அன்று எதேச்சையாக செரைகெலாவைத் தாண்டி சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கு ஒரு இரு சக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. அதனால் தப்ரெஸ் மற்றும் அவனுடன் இருந்த இருவர் தான் காரணம் என அந்த ஊர் மக்கள் சந்தேகப்பட்டு அடித்துள்ளனர். ஒரு நாள் இரவு முழுவதும் அவனை அடித்துள்ளனர். காலையில் போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். டப்ரேஸை காவல் நிலையத்தில் சென்று பார்க்க முயன்ற போது போலீசார் எங்களை பார்க்கவிடாமல் மிரட்டினார்கள். டப்ரேஸ் கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு உறவினர்கள் கூறினார்கள்.