ஜார்க்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி- 5 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது!
ஜார்க்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. 5 மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர் பதவிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
ஜார்க்கண்ட் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ராஞ்சி மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவியை பாஜக தக்க வைத்துள்ளது. மொத்தம் 5 மாநகராட்சிகளிலும் மேயர், துணை மேயர் பதவிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
ராஞ்சியில் பாஜக வேட்பாளர் ஆஷா லக்ரா மொத்தம் 1,49, 623 வாக்குகள் பெற்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் வர்ஷா காரியை தோற்கடித்தார். துணை மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் சஞ்சிவ் விஜய்பார்கியா, காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குப்தாவை தோற்கடித்தார்.
நகர் பரிஷத்துகளில் 7 தலைவர் பதவிகளையும் 16 துணை தலைவர்களையும் பாஜக வென்றுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 4, காங்கிரஸ் 2 நகர் பரிஷத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது. 14 நகர் பஞ்சாயத்துகளில் பாஜக 9 தலைவர், 5 துணைத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது.