தமிழகத்தில் மட்டுமல்ல.. ஜார்கண்டிலும் மோடியை விடாது துரத்தும் கருப்பு.. ஷூவையாவது விட்டாங்களே
Recommended Video
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வருகை தருவோர் கறுப்பு நிற ஆடை அணிந்திருக்க கூடாது என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சில மாதங்கள் முன்பாக, பாதுகாப்பு தளவாட கண்காட்சியை துவங்கி வைக்க, மாமல்லபுரம் வருகை தந்தபோது, காவிரி விவகாரத்திற்காக திமுகவினர் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தினர்.
சென்னை விமான நிலையத்தில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கருப்புக் கொடி போராட்டம்
இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்திலும், மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சியில் கருப்புக் கொடி காட்ட ஆசிரியர் சங்கத்தினர் முயலக்கூடும் என்பதால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் பலமு மாவட்டத்தில் வரும் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்கிறார்.
ஷூவுக்கும் கட்டுப்பாடு
இதில் பார்வையாளர்களாக பங்கேற்பவர்கள், கறுப்பு வண்ணத்திலல் எந்த ஒரு ஆடையும் அணிய கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், கறுப்பு சால்வை, பேண்ட், சட்டை, கோட், ஸ்வெவட்டர், மஃப்லர், சாக்ஸ், டை, பேக்குகள் மட்டுமின்றி, கறுப்பு நிற ஷூவும் அணிய கூடாது என மாவட்ட போலீஸ் எஸ்பி இந்திரஜித் மகதா டிசம்பர் 29ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஷூ தப்பியது
இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் கிளம்பிய நிலையில், கறுப்பு ஷூவுக்கான தடை விலக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. மற்றபடி பிற எந்த பொருளும் கறுப்பு வண்ணத்தில் இருக்க கூடாது என உத்தரவு நீடிக்கிறது.
ஆசிரியர்கள்
தலைநகர் ராஞ்சியில் ஜார்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸ், சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஒப்பந்த ஆசிரியர்கள் கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். பணி ஒழுங்குமுறை, ஊதிய சீரமைப்பு உள்ளிட்டவை கேட்டு அவர்கள் போராடி வந்த நிலையில், இவ்வாறு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். எனவேதான் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியிலும், ஆசிரியர்கள் கறுப்பு கொடி காட்டக்கூடும் என்பதால் இத்தனை கெடுபிடியாம்.