ஜார்கண்டில் பயங்கரம்.. தப்பிச் செல்ல முயற்சித்த 5 கைதிகள் சுட்டுக் கொலை- 12 பேர் தலைமறைவு
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் செல்ல முயன்ற 17 கைதிகளில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீதமுள்ள 12 கைதிகள் தப்பி விட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் 3வது கட்டமாக இன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் அபாயம் இருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
இந்நிலையில், ஜார்கண்டின் தெற்குப் பகுதியில் உள்ள சாய்பாசாவில் உள்ள சிறைக் கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணை முடிந்து மீண்டும் சிறை திரும்பும் வழியில் போலீசாரின் வண்டியில் இருந்து 17 கைதிகள் தப்பிக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
தப்பிக்க முயன்ற கைதிகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 கைதிகள் உயிரிழந்தனர். மீதமுள்ள 12 கைதிகள் தப்பிச் சென்று விட்டதாக ஜார்கண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தலைமறைவான கைதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.