மோடியை கேலி செய்ய தெருவில் போனோருக்கெல்லாம் தலா ரூ.15 லட்சம் 'செக்' கொடுத்த காங்கிரஸ்
அமிர்தசரஸ்: பாஜக ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு குடிமகன்களுக்கு தலா ரூ.15 லட்சம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து, மக்களை ஏமாளியாக்கிவிட்டார் என்று கூறி, பதினைந்து லட்சத்துக்கான டம்மி செக்குகளை காங்கிரஸ் நிர்வாகிகள் வினியோகம் செய்தனர்.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் வரி ஏய்ப்பு செய்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்திய மக்கள் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யப்படும் என்று நாடாளுமன்ற தேர்தலின்போது நரேந்திரமோடி வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், மோடி தலைமையில், பாஜக அரசு அமைந்து ஓராண்டு ஆகும் நிலையில், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதை கேலி செய்யும் வகையில் பஞ்சாப் மாநில, காங்கிரஸ் நிர்வாகிகள் அமிர்தசரஸ் நகரில் நேற்று நூதன பிரச்சாரம் நடத்தினர்.
ஏப்ரல் 1ம்தேதியான நேற்று முட்டாள்கள் தினம் என்பதால், மோடி மக்களை முட்டாளாக்கிவிட்டார் என்று கேலி செய்வதற்காக, டம்மி செக்குகளை வினியோகித்தனர்.
அந்த காசோலையில், "ஸ்டேட் வங்கி ஆப் மோடி' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர்பாப்பாட்டம் நடத்தியவர்கள், இந்த செக்குகளை, அந்த வழியாக சென்ற பஸ்கள், கார்களில் பயணித்தவர்களிடம் வினியோகித்தனர்.