குஜராத் தேர்தல் களத்தில் எதிரொலித்த 'தந்தை பெரியார்'
குஜராத் தேர்தல் களத்தில் தந்தை பெரியார் பெயரை உரக்க முழக்கமிட்டிருக்கிறார் ஜிக்னேஷ் மேவானி.
அகமதாபாத்: இந்துத்துவா சக்திகள் எங்கெல்லாம் வேர்பிடிக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களை எதிர்த்து களமாடுகிற ஒவ்வொருவரும் தந்தை பெரியாரை கைபிடித்தே பயணிக்கின்றனர். குஜராத்தில் தலித் மக்களின் எழுச்சி நாயகனாக இந்துத்துவா சக்திகளை அதிரவைக்கிற இளைஞர் ஜிக்னேஷ் மேவானி இதற்கு உதாரணம்.
ஜிக்னேஷ் மேவானி... ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தாகுர் வரிசையில் குஜராத் தேர்தல் களத்தை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுத்தவர்களில் ஒருவர்.. மாட்டிறைச்சி வைத்த மாபெரும் தேசதுரோக செயலுக்காக குஜராத்தின் உனாவில் ஒடுக்கப்பட்ட மக்களை இந்துத்துவா சக்திகள் வேட்டையாடிய பெருநெருப்பில் கிளர்ந்தெழுந்த கிளர்ச்சியாளர்.
தலித்துகளின் உரிமை மீட்பு களத்துக்காக லட்சக்கணக்கான மக்களை அணிதிரட்டி பழமைவாதமும் இந்துத்துவா சிந்தனையும் புரையோடிக் கிடக்கும் குஜராத் மண்ணில் அதிர்வலைகளை கிளப்பியவர். இந்த தேசத்தையே தமது கிளர்ச்சிக் குரலால் திரும்பிப் பார்க்க வைத்தவர் மேவானி.
குஜராத் தேர்தல் களத்தில் தீர்க்கமாகவே இந்துத்துவா சக்திகளை எதிர்த்தார். இந்துத்துவா சக்திகள் எந்த பெயரை உச்சரித்தால் தொடை நடுங்குவார்களோ அவர்கள் ஒருவரையும் மேவானி விட்டுவைக்கவில்லை.
நடந்து முடிந்த குஜராத் தேர்தல்ல #ஹிந்துத்துவா, #RSS & #மோடிக்கே சுயேட்சை வேட்பாளர் #ஜிக்னேஸ் மேவானி தண்ணி காட்டுறார்னு பார்த்தா., உண்மையில தண்ணிகாட்டுனது அவர் இல்ல, நம்ம “ராமசாமி பெருசு”. #அங்கயே_டவுசர்_அப்படி_கிழிஞ்சா #இங்க_சொல்லவா_வேணும்
— சிறுதுளி (@itntweets) December 19, 2017
#Periyar #RamasamyPeriyar #பெரியார் pic.twitter.com/YbYF37gAEe
ஆம் இந்த தேசத்தின் மேற்கு எல்லையான குஜராத்தில் தென்கோடி பூமியான தமிழகத்து கலகக்காரர் தந்தை பெரியாரின் உச்சரித்தார் மேவானி. தமது பிரசாரத்தில் தந்தை பெரியாரை மேற்கோள்காட்டி பேசினார் மேவானி.
இதோ தேர்தல் களத்தில் வெற்றி நாயகனாக சுயேச்சையாக வென்றிருக்கிறார் ஜிக்னேஷ் மேவானி. தற்போது இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் புதிய கிளர்ச்சி குரலாக அடையாளமாக உருவெடுத்திருக்கிறார் ஜிக்னேஷ் மேவானி என்பதில் சந்தேகம் இல்லை.