ஜியோகாயின் போலி ஆப்... மோசடி கும்பல் - அலறியடித்து அறிக்கை விட்ட முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானியின் கனவு திட்டமான ஜியோவின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்களை நம்ப வேண்டாம் என ரிலையன்ஸ் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது
மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோகாயின் திட்டத்திற்கு என்று போலியாக ஒரு ஆப்பை உருவாக்கி மக்களை ஏமாற்றி வரும் மோசடி கும்பலிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிர்வாகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது
இதுதொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, கிரிப்டோகரன்சி என்ற பெயரில் மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு ஜியோ சார்பாக எந்த மொபைல் ஆஃப்-ம் அறிமுகம் செய்யப்படவில்லை.
சில மோசடி கும்பல் ஜியோ பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த விவகாரத்தை ஜியோ நிறுவனம் முக்கியமானதாக எடுத்துக்கொண்டு இதற்கு காரணமான நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்து அதற்கான புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. டெலிகாம் சந்தையில் பல புரட்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்து மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், பல்வேறு வர்த்தக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதனை பயன்படுத்தி சில இணையகொள்ளையர்கள் இவ்வாறான பணியில் ஈடுபடுவதாக ரிலையன்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கிரிப்டோகரன்சி மீது முதலீட்டாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதால், ஜியோ நிறுவனம், விரைவில் கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்ய உள்ளதாக சமீபத்தில் இணையத்தில் தகவல் கசிந்தது. இதனையடுத்து வேறு எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஜியோகாயின் பெயரில் மோசடி கும்பல் கிரிப்டோகரன்சியை மக்களிடமிருந்து ஏமாற்றி வாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது
முகேஷ் அம்பானியின் மூத்த மகனாக ஆகாஷ் அம்பானி விரைவில், ரிலையன்ஸ் ஜியோ கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.