முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் பீகார் சட்டசபையை கலைக்க ஜிதன் ராம் மாஞ்சி அதிரடி ப்ளான்!
பாட்னா: முதல்வர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டால் பீகார் சட்டசபையையே கலைத்துவிடுவது என்று ஜிதன் ராம் மாஞ்சி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைத்தது. லோக்சபா தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதாவுடனான உறவை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டது. இதனால் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் பெரும்பான்மைக்கு போராடிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை படுதோல்வியை சந்தித்தன. பீகாரில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது.
இதனால் இந்த இரு கட்சிகளும் இணைந்து பாஜகவை எதிர்த்து செயல்படுவது என்று முடிவெடுத்தன. மேலும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜிதன் ராம் மாஞ்சி முதல்வராக்கப்பட்டார்.
முதல்வர் பதவி ஏற்றது முதலே ஜிதன் ராம் மாஞ்சி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஞ்சியின் செயல்பாடுகளை ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் மாஞ்சியின் கல்வி தகுதி, ஜாதி குறித்தும் பேசியதும் சர்ச்சையானது.
இதனைத் தொடர்ந்து சரத் யாதவுக்கு எதிராக ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜனசக்தி நீதிமன்றத்துக்குப் போனது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சரத்யாதவ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனை ஏற்று மாஞ்சி அரசும் சரத் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்தது.
இது ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்களை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நாளை சரத் யாதவ் கூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் ஜிதன் ராம் மாஞ்சி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். ஆனால் மாஞ்சியோ அப்படி தம்மை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினால் ஒட்டுமொத்தமாக பீகார் சட்டசபையையே கலைத்துவிடலாம் என்று பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளத்தில் மாஞ்சிக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு அதிகம் இல்லை என்றாலும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி அவரை ஆதரிக்கிறது.
இதனிடையே நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் முதல்வராக பதவியேற்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.