பீகார் முன்னாள் முதல்வர் மீது கிராம மக்கள் தாக்குதல் முயற்சி: பாதுகாப்பு வாகனம் தீவைத்து எரிப்பு
கயா: பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சியின் பாதுகாப்பு வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கச்சார் பகுதியை சேர்ந்த லோக் ஜனசக்தி தலைவர் சுதேஷ் பஸ்வானும், அவரது உறவினர் ஒருவரும் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி நேற்று கயா அருகே உள்ள பஸ்வானின் கிராமத்துக்கு சென்றார்.
அப்போது அங்கே இருவரின் உடல்களை வைத்துக்கொண்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மஞ்சியின் கார் அணிவகுப்பை பார்த்ததும் அவர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். அவரது கார் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புக்கு வந்த போலீஸ் ஜீப்பை தீ வைத்து எரித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள துமாரியா போலீஸ் நிலையம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையம் மீது கற்களை வீசினர். மேலும் அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர். கல் வீச்சில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் மனோஜ் யாதவ் காயம் அடைந்தார்.
இதையடுத்து, உடனே போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயற்சி செய்தனர். எனினும் கூட்டம் கலையாததால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின்னரே கூட்டம் கலைந்து சென்றது. இந்த வன்முறை சம்பவத்தில் மஞ்சி காயம் எதுவுமின்றி தப்பினார். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதாகவும் எனினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.