மட்டனோ, சிக்கனோ.. அளவா இருக்கனும்.. காஷ்மீரில் திருமண விருந்து + விருந்தினர்களுக்கு கட்டுப்பாடு!
ஜம்மு - காஷ்மீரில் திருமணத்திற்கு விருந்தினர்களை அழைக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் திருமணத்திற்கு விருந்தினர்களை அழைக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மகள் திருமணத்திற்கு 500 பேர் மற்றும் மகன் திருமணத்திற்கு 400 பேர் மட்டுமே அழைக்கப்பட வேண்டும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் உணவுப் பொருட்களை வீணடித்தலை தடுக்கும் வகையில் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக திருமணங்களில் உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவதை தடுக்கும வகையில் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் விரயத்தை தடுக்கும் வகையில் காஷ்மீர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் அரசின் இந்த சிக்கன நடவடிக்கை தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை வரவேற்பு தெரிவித்துள்ளன.
அழைப்பிதழுடன் பரிசுப் பொருட்கள் கூடாது
அதன்படி திருமண அழைப்பிதழுடன் பாதாம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட உலர் பழங்களை அனுப்பவும் சுவீட் வகைகளை கொடுக்க முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், விருந்தாளிகள் என யாருக்கும் அழைப்பிதழுடன் உணவுப் பொருட்களை அனுப்பக்கூடாது என ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு தெரிவித்துள்ளனர்.
ஒலிப்பெருக்கிகள் பட்டாசுளுக்கு தடை
மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தவும் பட்டாசுகளை வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் திருமணத்திற்கு அழைக்கப்பட வேண்டிய நபர்களின் எண்ணிக்கைக்கும் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இத்தனை பேரைதான் அழைக்கனும்
அதன்படி மணமகள் வீட்டார், அவர்கள் சார்பில் 500 பேரையும் மணமகன் வீட்டார் அவர்கள் சார்பில் 400 பேர் வரை மட்டுமே அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சிறு சிறு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்றும் ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
விருந்திலும் கட்டுப்பாடு
அசை மற்றும் சைவ விருந்துகளில் 7 வகைகளுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் திருமணக்கூடங்களில் இனிப்பு மற்றும் பழக்கடைகள் 2க்கு மேல் இருக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1முதல் அமலுக்கு வரும்
இந்த உத்தரவு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்டப் பொருட்கள் வீணாவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.