பாஜக ஏவிய கொடூர சட்டத்தில் இருந்து விடுதலை! நாடாளுமன்றத்துக்கு வருகிறேன்- பரூக் அப்துல்லா
ஸ்ரீநகர்: மத்திய பாரதிய ஜனதா அரசு ஏவிய பொது பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலையாகி உள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தாம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு. இந்த பிரிவை நீக்குவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ல் அறிவித்தது. இதற்கான சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எந்த எதிர்ப்பும் எழுந்து போராட்டங்கள் வெடிக்கக் கூடாது என்பதற்காக காஷ்மீரில் பல்லாயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஏராளமானோர் வீட்டுக் காவல்களிலும் சிறைகளிலும் அடைக்கப்பட்டனர்.
மேலும் ஜம்மு காஷ்மீர் என்கிற மாநிலமே 2 ஆக பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டிருந்தன. ஜம்மு காஷ்மீரில் 7 மாதங்களாக எந்த ஒரு அரசியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் ஜனநாயகம் இழுத்து மூடப்பட்டிருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரசியல் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி நீதிமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தப்பட்டன. ஆனால் வன்மம் கொண்ட மத்திய பாஜக அரசு, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்பு சட்டத்தை ஏவியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பரூக் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 7 மாதங்களாக வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்படுகிறார்.
இதன்பின்னர் தமது ஆதரவாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, இன்று என்னிடம் சொல்ல வார்த்தைகளே இல்லை. இன்று நான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறேன். டெல்லிக்கு சென்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க உள்ளேன். நாடாளுமன்றத்தில் உங்களின் குரலை ஒலிப்பேன் என்றார்