காஷ்மீர்: பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மெகபூபா முப்தியின் காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழான காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்தது. இதனையடுத்து முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் முன்னாள் முதல்வர்கள் மீது அடுத்தடுத்து பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கானோரை மத்திய அரசு சிறைகளில் இருந்து விடுதலை செய்தது.
அதேபோல் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோரும் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டனர். தற்போது மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் முன்வைத்த திட்டங்கள்.. அப்படியே பிரதிபலித்த புதிய கல்வி கொள்கை..அடுத்த டார்கெட் சிலபஸ்!
இதனிடையே 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஓராண்டாவதால் ஆகஸ்ட் 5-ந் தேதி மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழான மெகபூபா முப்தியின் காவல் மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் ஆகஸ்ட் 5-ந் தேதி விடுவிக்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.