14 மாத சிறைவாசம்... மெகபூபா முப்தி விடுதலை- ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 14 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தனி மாநிலமாக இருந்த போது அம்மாநிலத்துக்கு இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்தது.
அப்போது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரும்பாலான தலைவர்கள் ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ஹத்ராஸ் பலாத்காரம்: படுகொலையான பெண் உடலை அவசரமாக எரித்தது மனித உரிமை மீறல்: ஹைகோர்ட் கண்டனம்
மெகபூபா மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
இருப்பினும் மெகபூபா முப்தி மட்டும் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார். அவர் மீது பொது பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. மெகபூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
மெகபூபா விடுதலை
இந்நிலையில் மெகபூபா முப்தியை விடுதலை செய்வதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் இதனை அறிவித்துள்ளார்.
மெகபூபாவை வரவேற்கிறேன்
மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளதை முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார். விடுதலையாகும் மெகபூபா முப்தியை வரவேற்பதாகவும் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
குலாம்நபி ஆசாத் கேள்வி
மெகபூபா முப்தி விடுதலையை வரவேற்றுள்ளார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா எதற்காக கைது செய்யபட்டனர்? அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? ஜனநாயகம் வாழ்க! என பதிவிட்டிருக்கிறார்.