முதல் முறையாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முதல் முறையாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஆகியவை இணைந்து மெகா கூட்டணி அமைத்து களம் கண்டன. ஜே.எம்.எம். கட்சி 43 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
பாஜக தனித்து போட்டியிட்டது. பாஜகவுடன் கூட்டணி கட்சியாக இருந்த ஏஜேஎஸ்யூவும் இம்முறை தனித்து போட்டியிட்டது,
29 தொகுதிகளில் ஜே.எம்.எம்.
தற்போதைய நிலவரப்படி ஜே.எம்.எம். கட்சி மட்டும் 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் ஆர்ஜேடி 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜக 24 தொகுதிகளில் முன்னிலையிலலுள்ளது.
நிலையற்ற ஆட்சிகள்
1960களில் இருந்து ஜார்க்கண்ட் தனி மாநில கோரிக்கைக்கான போராட்டத்தை நடத்தி வந்தது ஜே.எம்.எம். 2000-ம் ஆண்டு ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவானது முதல் ஒவ்வொரு முறையும் நிலையற்ற ஆட்சிகள்தான் அமைந்தன.
சாதித்த பாஜக
2014-ம் ஆண்டு ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக, கட்சி தாவல் மூலம் பெரும்பான்மைக்கான எம்.எல்.ஏக்களை சேர்த்துக் கொண்டது. ஜார்க்கண்ட்டில் பாஜகதான் முதல் முறையாக 5 ஆண்டுகளும் ஆட்சி செய்தது.
தேர்தல்களில் ஜே.எம்.எம்.
தற்போது ஜே..எம்.எம். கட்சி மட்டும் 29 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலில் 19 இடங்களில்தான் ஜே.எம்.எம். வெற்றி பெற்றிருந்தது. 2009-ம் ஆண்டு 18 இடங்களிலும் 2005 தேர்தலில் 17 இடங்களிலும் ஜே.எம்.எம். வென்றது. ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவான பின்னர் 2000-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பீகார் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் முதல் அரசு அமைந்தது. அப்போது ஜே.எம்.எம்.க்கு 17 எம்.எல்.ஏக்கள் இருந்தனர்.
மெகா கூட்டணியின் பலம்
தற்போதுதான் 29 இடங்கள் என்ற மிகப் பெரிய வெற்றியை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது ஜே..எம்.எம். காங்கிரஸ்- ஆர்ஜேடி ஆகியவற்றை இணைத்து உருவான மெகா கூட்டணிதான் ஜே.எம்.எம். கட்சியின் விஸ்வரூப வெற்றிக்கு முதன்மையான காரணம் எனலாம்.