கன்யா குமாருக்கு அனுமதி மறுப்பு...ஹைதராபாத் பல்கலையில் மீண்டும் பதட்டம் !
ஹைதராபாத்: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்யாகுமாருக்கு ஹைதராபாத் பல்கலை வளாகத்திற்கு அனுமதிக்க மறுத்ததால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால் மார்ச் 27-ம் தேதி வரை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பா ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக தலித் ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா கடந்த ஜனவரி 17-ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பல்கலைக் கழக துணை வேந்தர் அப்பாராவ் மீதும் வழக்கு பதிவாகி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் இரண்டு மாதம் விடுப்பில் சென்றார்.
துணை வேந்தர் அப்பாராவ் விடுப்பு முடிந்து செவ்வாய்கிழமை மீண்டும் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். வழக்கு முடியாமல் இருக்கும் பொழுது அப்பாராவ் நிர்வாகப் பொறுப்பை ஏற்கக் கூடாது என மாணவர்கள், துணை வேந்தருக்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது அலுவலகம், தங்கும் விடுதி மற்றும் கார் ஆகியவை சூறையாடப்பட்டது. இதையடுத்து போலீசார் சென்று வன்முறையை அடக்கினர்.
இந்நிலையில், ஹைதராபாத் பல்கலைக் கழக வளாகத்திற்குள் ரோகித் வெமுலாவிற்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்யா குமார் புதன்கிழமை பேசுவார் என ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று மதியம் கன்யா குமார் ஹைதராபாத் வந்து சேர்ந்தார்.
ஆனால் முன்னதாக அங்கு நடந்த பிரச்சனையை காரணம் காட்டி கன்யா குமாரை ஹைதராபாத் பல்கலைக் கழக நிர்வாகம் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவாகியது.
பின்னர் பல்கலைக் கழகத்தின் நுழைவு வாசலில் பேசிய கன்யா குமார், மாணவர்களின் குரலை மத்திய, மாநில அரசுகள் நசுக்குவதாக குற்றம்சாட்டினார். மேலும் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காப்பாற்றவே போராட்டம் நடத்துவதாகவும், ரோகித் வெமுலாவுக்கு நீதி கிடைக்கும் வரை மாணவர்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.