ஜே.என்.யூ மாணவர்கள் 3 பேரை பிடிக்க 'லுக்-அவுட்' சுற்றரிக்கை.. விமான நிலையங்களில் அலர்ட்
டெல்லி: அப்சல் குரு ஆதரவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 3 மாணவர்களுக்கு எதிராக கண்டதும் பிடிக்கும் சுற்றரிக்கையை பிறப்பித்துள்ளது டெல்லி காவல்துறை. இதனால், வெளிநாடுகளுக்கு அவர்கள் தப்பி செல்லாமல் தடுக்க முடியும்.
கடந்த 9ம் தேதி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அப்சல் குரு ஆதரவு நிகழ்ச்சியை ஜனநாயக மாணவர் அமைப்பு நடத்தியது. அப்போது இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்களை சில மாணவர்கள் எழுப்பினர்.
இதுதொடர்பாக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மேலும் மூன்று மாணவர்கள் தலைமறைவாக உள்ளனர். பல மாநிலங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ உண்மையானதா அல்லது ஜோடிக்கப்பட்டதா என்பதை கண்டறிய வீடியோ காட்சிகளை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது காவல்துறை.
பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளோடு அவர்களுக்கு தொடர்புள்ளகவும், அவர்கள் செல்போன்களில் இருந்து வெளிநாடுகளுக்கு அழைப்புகள் சென்றுள்ளதாகவும், சில சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனவே, அந்த மாணவர்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, லுக் அவுட் சர்க்குலர் வினியோகம் செய்துள்ளது டெல்லி காவல்துறை. விமான நிலைய அதிகாரிகளுக்கும், அந்த மாணவர்களின் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எங்கு கண்டாலும் உடனடியாக அவர்களை பிடிக்க வேண்டும், ஏர்போர்ட் வழியாக வெளிநாடுகளுக்கு செல்ல விடாமல் தடுக்க வேண்டும் என்பது இந்த சுற்றரிக்கையின் அம்சமாகும்.