ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் குமாரின் காவல் நீட்டிக்கப்பட மாட்டாது: டெல்லி போலீஸ்
டெல்லி: தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்யா குமாரின் காவலை நீட்டிக்க கோருவதில்லை என்று டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளார்களாம்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 9ம் தேதி நடந்த நிகழ்ச்சியின்போது நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவை புகழ்ந்தும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்டதாகக் கூறி மாணவர் சங்க தலைவர் கன்யா குமாரை போலீசார் தேச துரோக வழக்கில் கடந்த 12ம் தேதி கைது செய்தனர்.
5 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட அவர் கடந்த 17ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் குமாரை மார்ச் மாதம் 2ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் சரண் அடைந்ததும் போலீசார் குமாரிடம் தீவிர விசாரணை நடத்துவது முக்கியம் என்று கருதினர்.
போலீசார் குமார், காலித் மற்றும் அனிர்பனிடம் தனித்தனியாக விசாரித்து அவர்கள் கூறியதை ஆய்வு செய்து வருகிறார்கள். மூன்று பேரும் அளித்த தகவல்கள் ஒத்துப் போகவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
குமாரிடம் இருந்து அனைத்து தகவல்களையும் பெற்றுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெளியாட்கள் யாரோ கோஷமிட்டதாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் குமார் தெரிவித்துள்ளார். குமாரிடம் விசாரணையை முடித்துவிட்டதால் அவரின் காவலை நீட்டிப்பதில் டெல்லி போலீசார் ஆர்வமாக இல்லை.