ஜேஎன்யூ விவகாரம்: போலீஸ் காவல் முடிந்த கையோடு உமர், அனிர்பனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
டெல்லி: தேச துரோக வழக்கில் கைதாகியுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராகவும், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவை புகழ்ந்தும் கோஷமிட்டதாக கூறப்படுகிறது.
அப்சல் குருவை பாராட்டியும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர்கள் சங்க தலைவர் கன்யா குமார், மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உமர் மற்றும் அனிர்பன் ஆகியோரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிந்தது. இதையடுத்து அவர்கள் டெல்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில் உமரும், அனிர்பனும் அளித்த தகவல்கள் ஒத்துப் போகவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.