டெல்லி ஜே.என்.யூ பல்கலை.யில் பதற்றம்.. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து!
டெல்லி ஜே.என்.யூ பல்கலை.யில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தையும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் இன்று ரத்து செய்துவிட்டது.
ஜவஹர்லால் நேரு பல்கலை. (ஜே.என்.யூ) பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பாக ராமஜென்ம பூமி இயக்க தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்பதாக இருந்தது.
சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கேள்விகள் எழுப்பப்பட்டால் பிரச்சனை வெடிக்கும் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சி முதலில் ரத்து செய்யப்பட்டது. அதேநேரத்தில் மார்க்சிஸ் கட்சியின் பிரகாஷ் காரத் பங்கேற்கும் மற்றொரு நிகழ்ச்சிக்கு முதலில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
பின்னர் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் பிரகாஷ் காரத் நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் டெல்லி ஜே.என்.யூ பல்கலை. வளாகத்தில் பதற்றம் நிலவுகிறது.